Archives: ஜூன் 2026

உனக்கென்ன

“அவளுக்குத் திராட்சை லாலிபாப், எனக்கு மட்டும் ஸ்ட்ராபெரி லாலிபாப்பா?” என் சகோதரியின் ஆறு வயது மகள் கேட்டாள். குழந்தைகள், தாங்கள் பெறுவதையும் பிறர் பெறுவதையும் ஒப்பிட்டுப் பார்ப்பதை, என் சகோதரியின் பிள்ளைகள் ஆரம்பத்திலேயே எனக்குக் கற்றுக் கொடுத்தார்கள். இதன் பொருள் என்னவென்றால், ஒரு சித்தியாக , நான் நியாயமாகத் தீர்ப்பளிக்க வேண்டும்.

நானும் சில சமயங்களில் தேவன் எனக்குக் கொடுப்பதைப் பிறருக்குக் கொடுக்கப்பட்டதோடு ஒப்பிடுவேன். “எனக்கு ஏன் இது, அவளுக்கு மட்டும் அது?” என்று தேவனைக் கேட்டிருக்கிறேன். கலிலேயா கடலோரம் இயேசுவிடம் சீமோன் பேதுரு கேட்டதை என் கேள்வி எனக்கு நினைவூட்டுகிறது. பேதுரு தன்னை முன்பு மறுதலித்ததற்காக இயேசு அவனை மன்னித்தார். இப்போது ஒரு இரத்தசாட்சியான மரணத்தின் மூலம் தேவனை பேதுரு மகிமைப்படுத்தப் போவதாகக் கூறினார் (யோவான் 21:15-19). இருப்பினும், தம்மைப் பின்தொடரும்படியான இயேசுவின் அழைப்பிற்கு ஆம் என்று பதிலளிப்பதற்குப் பதிலாக, பேதுரு, “இவன் [யோவான்] காரியம் என்ன?” என்று கேட்டார். (வ. 21).

அதற்கு இயேசு, “உனக்கென்ன, நீ என்னைப் பின்பற்றிவா என்றார்.” (வ. 22). இயேசு நமக்கும் அதையே சொல்வார் என்று நான் நம்புகிறேன். நம் வாழ்வின் வழிகாட்டுதலை ஏற்கனவே அவர் நமக்கு அருளியிருக்கையில், நம்மில் விசுவாசத்தை எதிர்பார்க்கிறார். நாம் நமது பாதையை மற்றவர்களுடன் ஒப்பிடக்கூடாது, மாறாக நாம் அவரைப் பின்பற்றினால் போதும்.

முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக, அப்போஸ்தலனாகிய பேதுரு, ஆதித்திருச்சபையின் தைரியமான தலைவராகத் தேவனைப் பின்பற்றினார். தீய பேரரசன் நீரோவின் கீழ் அவர் அச்சமின்றி மரணத்தைத் தழுவியதாகவும் வரலாற்றுப் பதிவுகள் காட்டுகின்றன. நாமும் தேவனைப் பின்பற்றுவதில் உறுதியாகவும், கேள்விக்கு இடமில்லாமல் அவருடைய அன்பையும் வழிநடத்துதலையும் நம்புவோமாக. 

 

நீ பிரியமானவன்(ள்)

தன் சோகத்தை வெளிப்படுத்த, அந்த இளம் பெண் மாலினி, ஒரு மரத் துண்டில், "“உண்மையைச் சொல்வதானால், நான் சோகமாக இருக்கிறேன். யாரும் என்னுடன் சேர விரும்பவில்லை, என்னை நேசிக்கும் ஒரே நபரையும் நான் இழந்துவிட்டேன். நான் தினமும் அழுகிறேன்" என்றெழுதி எழுதி பூங்காவில் வைத்துவிட்டாள்.

யாரோ ஒருத்தி அந்தக் குறிப்பைக் கண்டெடுத்தபோது, பூங்காவிற்கு ஒரு பெரிய எழுத்துப் பலகையைக் கொண்டு வந்து, மக்கள் தங்கள் எண்ணங்களை மாலினிக்காக எழுதச் சொன்னாள். அருகிலுள்ள பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள், "நாங்கள் உன்னை நேசிக்கிறோம்", "தேவன் உன்னை நேசிக்கிறார்", "நீ பிரியமானவள்" என்றெல்லாம் பல ஆதரவான வார்த்தைகளை எழுதிச் சென்றனர். பள்ளி முதல்வரும் "அவளிடம் உள்ள வெறுமை நிரம்பும்படி அவளுக்கு உதவிட நாம் எடுக்கும் சிறிய முயற்சி இது. அவள் நம் அனைவரையும் பிரதிபலிக்கிறாள், ஏனெனில் ஒரு கட்டத்தில் நாம் அனைவரும் சோகத்தையும் துன்பத்தையும் அனுபவிப்போம் அல்லது அனுபவிக்கிறோம்" என்றார்.

"நீ பிரியமானவள்" என்ற வார்த்தை, மோசே இறப்பதற்குச் சற்று முன்பு இஸ்ரவேல் கோத்திரமான பென்யமீனுக்கு அளித்த அற்புதமான ஆசீர்வாதத்தை எனக்கு நினைவூட்டுகிறது, " கர்த்தருக்குப் பிரியமானவன், அவரோடே சுகமாய்த் தங்கியிருப்பான்" (உபாகமம் 33:12). மோசே தேவனுக்காக ஒரு வலிமையான தலைவராக இருந்தார், எதிரி நாடுகளைத் தோற்கடித்தார், பத்து கட்டளைகளைப் பெற்றார், தேவனைப் பின்பற்ற அவர்களுக்கு அறைகூவல் விடுத்தார். அவர் அவர்களைத் தேவனின் கண்ணோட்டத்தில் கண்டு மரித்தார். பிரியமானவன் என்ற வார்த்தையை நாமும் நமக்கு உரிமையாக்கிக் கொள்ளலாம். ஏனென்றால் இயேசு கூறினார், "தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்" (யோவான் 3:16).

 

டோனாவூரில் அன்பு

"அம்மா" என்பது தாய்க்கான தமிழ் வார்த்தையாகும், இது எமி கார்மைக்கேலின் கல்லறையின் இடத்தில் உள்ள பறவைகளுக்கான குளத்தின் மீது பொறிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் டோனாவூரில் உள்ள அவரது மிஷன் பள்ளி, தேவதாசிகளாக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான சிறுமிகளுக்கு ஒரு புகலிடமாக மாறியது. அவரது ஆரம்ப ஆண்டுகளில் பல இரவுகளில், எங்காவது ஒரு சிறுமியைக் காப்பாற்றுவதற்காக, சேலை உடுத்திக்கொண்டு சைக்கிளில் செல்வார் என்று கூறப்படுகிறது. 1931 இல் கீழே மோசமாக விழுந்ததைத் தொடர்ந்து அவர் படுத்த படுக்கையான பிறகும், மற்றவர்கள் மூலம் இந்தக் குழந்தைகளை மீட்பதைத் தொடர்ந்தார். அவர் பல கடிதங்கள் மற்றும் புத்தகங்களை எழுதினார், அவை சேவையைத் தொடரவும், பள்ளிக்கு நிதி பெறவும் உதவின. குழந்தைகளை எமியிடம் ஈர்த்தது எது என்று கேட்டபோது, அவர்கள் “அன்புதான். அம்மா எங்களை நேசித்தார்" என்றார்கள்.

சில சமயங்களில் அன்புதான் சகல நற்பண்புகளுக்கும் தாய் என்பதை நினைவூட்டிக்கொள்ள வேண்டும். உண்மையான அன்பை கிறிஸ்துவில் அனுபவிக்க முடியும், ஏனென்றால் அவர் அன்பின் மனு உருவம் (வ.8). கிறிஸ்துவின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதலின் மூலமாக, நமக்கு உண்மையான அன்பின் செயல் விளக்கம் கொடுக்கப்பட்டது. இயேசுவின் அன்பு நிபந்தனைக்குட்பட்டது அல்ல. அவர் தகுதியற்றவர்களையும் நேசித்தார் (வ.11). தேவன் நம்மை நேசிக்கும் விதத்தில் நாம் அன்பைப் பார்க்கும்போது, அதை எவ்வாறு வெளிப்படுத்துவது என்பது பற்றிய நமது கண்ணோட்டத்தை அது மாற்றுகிறது. இயேசுவைப் போல நாம் நேசிக்காதவரை, தேவனை உண்மையாக அறிய முடியாது என்பதை உணர உதவுகிறது (வ.7-8). பூமியில் உள்ள ஒவ்வொரு நபரும் தேவசாயலில் படைக்கப்பட்டுள்ளனர் (ஆதியாகமம் 1:27) மேலும் நாம் சந்திக்கும் ஒவ்வொருவருக்கும் அன்பு தேவை. தேவபிள்ளைகளாகிய நாம், உண்மையான, கறைபடியாத அன்பின் அர்த்தத்தை, அன்பிற்காகப் பசியால் வாடுபவர்களுக்குக் காட்டத் தகுதியான இடத்தில் இருக்கிறோம். டோனாவூா் அடிமைப் பெண்களின் அன்பின் திருவுருவமாக மாறிய எமியைப் போல நாமும் நம் ஒவ்வொரு செயலிலும், சொல்லிலும், கிரியையிலும் இயேசுவின் உண்மையான அன்பை உருப்படுத்துவோம். 

 

வாழ்வின் யாத்திரை

ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு மதங்களைச் சேர்ந்த இருபது கோடிக்கும் அதிகமான ஜனங்கள் புனித யாத்திரை செல்கின்றனர். காலங்காலமாக “ஒரு யாத்ரீகரின் நோக்கம் ஏதோவொரு ஆசீர்வாதத்தைப் பெற்றிட புனித ஸ்தலத்திற்குப் பயணித்தல்” எனப் பலர் கருதுகின்றனர்.

எனினும், பிரிட்டனின் செல்டிக் கிறிஸ்தவர்கள் புனித யாத்திரையை வித்தியாசமாக அணுகினர். அவர்கள் திக்கு திசை அறியா காட்டுப் பகுதிகளுக்கோ அல்லது படகேறி கடல் இழுக்கும் போக்கிலோ பயணப்படுகிறார்கள். அவர்களுக்குப் பரிச்சயமில்லாத இடத்தில் தேவனை நம்புவதே அவர்களின் யாத்திரை. அவர்களுக்கு ஆசீர்வாதம் இலக்கில் அல்ல, ஆனால் பயணத்தில் கிடைத்தது.

இவர்களின் வாழ்க்கை எபிரேயர் 11ஐ பிரதிபலிக்கிறது. ஏனெனில் கிறிஸ்துவிலான வாழ்க்கை என்பது உலக வழிகளை விட்டு, தேவனின் நகரத்திற்கு அந்நியரைப் போலச் சாகச பயணம் செய்வதைப் போன்றது (வ.13-16) என வாழ்க்கைப் பயணத்தை விவரிக்கிறது . கடினமான, நடந்திராத பாதையில் அனைத்திற்கும் தேவனையே நம்புவதன் மூலம், ஒரு யாத்ரீகர் முந்தைய விசுவாச வீரர்கள் வாழ்ந்துகாட்டிய விசுவாசத்தை பின்பற்றுகின்றனர்(வ.1-12).

நாம் உண்மையாகவே மலையேற்றம் செய்கிறோமோ இல்லையோ, நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் இதுவே: இயேசுவை நம்பியவர்களுக்கு, வாழ்க்கை என்பது பரலோக நாட்டிற்கு ஒரு புனிதப் பயணம். வழியோ இருண்ட காடுகள், முட்டுக்கட்டைகள் மற்றும் சோதனைகள் நிறைந்தது. நாம் பயணிக்கையில், வழியெங்கிலும் தேவனின் பராமரிப்பை அனுபவிக்கும் பாக்கியத்தைத் தவறவிடாமல் இருப்போமாக. 

 

தொடர்புடைய தலைப்புகள்

> odb

கிறிஸ்துவில் நிலைத்திருத்தல்

ஒரு தீ தேவாலயத்தை தரைமட்டமாக்கியது. தீ தணிந்த பிறகு தீயணைப்பு மற்றும் சமூக உறுப்பினர்கள் கூடிவந்தபோது, காற்றில் புகை மற்றும் சாம்பலுக்கு இடையே ஒரு கருகிய சிலுவை நிமிர்ந்து நிற்பதைக் கண்டு அவர்கள் ஆச்சரியமடைந்தனர். ஒரு தீயணைப்பு வீரர் கருத்து தெரிவிக்கையில், தீ “கட்டிடத்தை எரித்தது, ஆனால் சிலுவையை எரிக்கவில்லை. அந்த கட்டிடம் ஒரு கட்டிடம் தான்; ஆலயம் என்பது அங்கிருக்கும் மக்கள் கூட்டமே என்பதை நினைவுபடுத்துகிறது.”

தேவாலயம் ஒரு கட்டிடம் அல்ல, ஆனால் மரித்து, அடக்கம் செய்யப்பட்டு, மீண்டும் உயிர்த்தெழுந்த கிறிஸ்துவின் சிலுவையால் ஒன்றுபட்ட ஒரு சமூகம். இயேசு பூமியில் வாழ்ந்தபோது, அவர் பேதுருவிடம் தனது உலகளாவிய தேவாலயத்தைக் கட்டுவதாகக் கூறினார், எதுவும் அதை அழிக்காது (மத்தேயு 16:18). இயேசு உலகெங்கிலும் உள்ள விசுவாசிகளை ஒரு குழுவாகச் சேர்ப்பார், அது காலம் முழுவதும் தொடரும். இந்த சமூகம் கடுமையான சிரமத்தை எதிர்கொள்ளும், ஆனால் அவர்கள் இறுதியில் ஜெயங்கொள்ளுவார்கள். தேவன் அவர்களுக்குள்ளே தங்கி அவர்களை ஆதரிப்பார் (எபேசியர் 2:22).

ஸ்தல தேவாலயங்களை நிறுவுவதற்கு நாம் போராடும்போது, அவை தேங்கி நிற்கும் போது, கட்டிடங்கள் அழிக்கப்படும்போது, அல்லது உலகின் பிற பகுதிகளில் விசுவாசிகள் போராடுவதைப் பற்றி நாம் கவலைப்படும்போது, இயேசு உயிருடன் இருக்கிறார் என்பதை நாம் நினைவில் கொள்ளலாம். தேவ ஜனம் விடாமுயற்சியுடன் செயல்பட அவர் நமக்கு உதவுகிறார். இன்று அவர் கட்டும் தேவாலயத்தின் ஒரு பகுதியாக நாம் இருக்கிறோம். அவர் நம்முடனும் நமக்காகவும் இருக்கிறார். அவருடைய சிலுவை மட்டும் அப்படியே நிலைத்திருக்கிறது.

 

ஒரு நல்ல திருப்பம்

இந்தியாவில் "பாரத் ஸ்கவுட்ஸ் அண்ட் கைட்ஸ்" என்று அழைக்கப்படும் சாரணர் இயக்கம், “தினமும் ஒரு நல்ல திருப்பத்தை ஏற்படுத்து" என்ற மிகவும் சுவாரஸ்யமான முழக்கத்தைக் கொண்டுள்ளது. இதன் பொருள் என்னவென்றால், ஒவ்வொரு நாளும் அதன் உறுப்பினர்கள் ஒருவருக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது அவர்களின் நாட்டை சிறந்த இடமாக மாற்றும் கருணை மற்றும் உதவியின் சிறிய செயலாகவும் இருக்கலாம். அந்த "நல்ல செயல்" எதுவென்று என்பது பற்றி எந்த விளக்கமும் இல்லை என்றாலும், மற்றொரு நபரின் வாழ்க்கையைச் சற்றே எளிதாக்குவதில் அதற்கு ஏதாகிலும் தொடர்பு இருக்க வேண்டுமென்றே பொதுவாகப் புரிந்து கொள்ளப்படுகிறது.

சங்கீதம் 90:12, “நாங்கள் ஞான இருதயமுள்ளவர்களாகும்படி, எங்கள் நாட்களை எண்ணும் அறிவை எங்களுக்குப் போதித்தருளும்" என்கிறது. ஆரம்பத்தில் இது வயதானவர்களுக்கான அறிவுரையாகத் தோன்றலாம். இருப்பினும், அதைக் கூர்ந்து படிக்கும்போது, இது சிறியவர்கள் மற்றும் பெரியவர்கள் என்று அனைவருக்கும் பொருந்தும் என்பதை நாம புரிந்துகொள்கிறோம். நமது ஆயுட்காலம் எழுபது ஆண்டுகள் என்று சங்கீதக்காரன் கூறுகிறார். முதலில், இந்த ஆண்டுகளின் எண்ணிக்கை மனித வாழ்க்கையின் நீண்ட ஆயுளைக் குறிக்கிறது போலத் தோன்றினாலும், கூர்ந்து கவனித்ததில், சங்கீதக்காரன் உண்மையில் ஒரு நபரின் ஆயுட்காலம் பற்றிக் குறிப்பிடவில்லை, ஆனால் அவர் நம் பூமிக்குரிய வாழ்நாட்களை நோக்கம் வாய்ந்தவையாக இருக்குமாறு உறுதிப்படுத்திக் கொள்ளும்படி கேட்கிறார் என்பதை நாம் புரிந்துகொள்கிறோம்.

சிறிய கருணை செயல், கண்ணியமான மரியாதை, உதவி செய்வதற்கான ஆயத்தம் மற்றும் பிறரை அவர்களின் அந்தஸ்தைப் பொருட்படுத்தாமல் பாரபட்சமின்றி நடத்துதல் ஆகியவை நம் நாட்களைச் சரியாக வாழ சில எளிய வழிகள். பூமியில் இருக்கும் நேரத்தை நம்மால் ஒருபோதும் கணிக்க முடியாவிட்டாலும், ஒவ்வொரு நாளும் நன்மை செய்வதன் மூலம் முடிந்தவரைத் தாக்கத்தை விட்டுசெல்ல நாம் தீர்மானிக்கலாம். நாம் கிறிஸ்துவில் வளர்ந்து, அவருடைய சுபாவங்களை வெளிப்படுத்தும்போது, ஒவ்வொரு நாளையும் முக்கியத்துவம் வாய்ந்ததாக்குவோம். 

 

விசுவாசத்தில் அடியெடுத்து வைத்தல்

சிறப்புப் பேச்சாளர் தேவனை நம்பி “நதியில் அடியெடுத்து வைப்பதன்” ஞானத்தைப் பற்றி பேசினார். தேவனை நம்பிய ஒரு போதகரைப் பற்றி அவர் கூறினார். அவருடைய நாட்டில் புதிய சட்டம் இருந்தபோதிலும் ஒரு பிரசங்கத்தில் வேதாகமத்தின் உண்மைகளைப் பேசத் தேர்ந்தெடுத்தார். அவர் அந்த குற்றத்திற்காக தண்டிக்கப்பட்டு முப்பது நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால் அவரது வழக்கு மேல்முறையீடு செய்யப்பட்டது. அதில் வேதாகமத்தைக் குறித்த தனிப்பட்ட விளக்கத்தை அளிக்கவும் மற்றவர்களைப் பின்பற்றும்படி வலியுறுத்தவும் அவருக்கு உரிமை இருப்பதாக நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

உடன்படிக்கைப் பேழையைச் சுமக்கும் ஆசாரியர்களும் ஒரு தேர்வு செய்ய வேண்டியிருந்தது —தண்ணீரில் இறங்குவது அல்லது கரையில் தங்குவது. எகிப்திலிருந்து தப்பித்த இஸ்ரவேலர்கள் நாற்பது வருடங்கள் வனாந்திரத்தில் அலைந்து திரிந்தனர். இப்போது அவர்கள் யோர்தான் நதியின்; கரையில் நின்றார்கள். அது வெள்ளப்பெருக்கெடுக்கும் ஆபத்தான நிலையில் இருந்தது. ஆனால் அவர்கள் துணிந்து இறங்கினர். தேவன் தண்ணீரை குறையச் செய்தார்: “ஆசாரியர்களின் கால்கள் தண்ணீரின் ஓரத்தில் பட்டவுடனே, மேலேயிருந்து ஓடிவருகிற தண்ணீர் நின்று..” (யோசுவா 3:15-16).

நாம் நம் வாழ்வில் தேவனை நம்பும்போது, வேதாகமத்தின் உண்மைகளைப் பேசுவதைத் தேர்ந்தெடுத்தாலும் அல்லது தெரியாத பிரதேசத்தில் ஒரு அடி எடுத்து வைப்பதைத் தேர்ந்தெடுத்தாலும், முன்னேறுவதற்கு ஆண்டவா் நமக்கு தைரியத்தைத் தருகிறார். போதகரின் விசாரணையின் போது, நீதிமன்றம் அவரது பிரசங்கத்தைக் கேட்பதன் மூலம் நற்செய்தியைக் கேட்டது. மேலும், யோசுவா புத்தகத்தில் இஸ்ரவேலர்கள் வாக்களிக்கப்பட்ட தேசத்திற்குள் பாதுகாப்பாகக் கடந்து, வருங்கால சந்ததியினருடன் தேவனுடைய வல்லமையைக் குறித்து பகிர்ந்து கொண்டனர் (வச. 17; 4:24).

விசுவாசத்தில் நாம் துணிந்து அடியெடுத்து வைத்தால், தேவன் மற்றதைப் பார்த்துக்கொள்வார்.